ஆயா கடை பஜ்ஜியும், ஏலக்காய் டீயும் ஆவி பறக்க ரெடியாகிடுச்சு! இந்த ‘ஆப்பக்கடை’ அரசியல் அலசல் நிஜமாவே காரசாரமான மசால் டீயை விட சூடா இருக்கு…
எடப்பாடி வழக்கு விசாரணைக்கு வருதாமே…!
பெருமாளு… என்னப்பா… என்ன சொன்னாலும் எடப்பாடி கேட்க மாட்டேங்கிறார். அவரு சொன்ன அத்தனையும் செஞ்சும் பலனில்லை. எப்படியும் இந்த தடவையும் கடுமையாக பாஜக அணி ஊத்திக்கும் போல தெரியுது. இது எல்லாருக்குமே புரிஞ்சிருச்சு… இதுனால… எடப்பாடியை அடக்கனும் முடிவு பண்ணிட்டாங்க என்றார் மேஸ்திரி. எதுக்கு அடக்கனும் மேஸ்திரி… தேர்தல் முடிஞ்சதும் அவரே அடங்கிருவாரேனு கிண்டல் அடித்தான் பெருமாள். இல்லப்பா… அதுக்கும் மேல…. பெரிசா ஏதாவது ஒன்னு எடப்பாடிக்கு தரணும்னு முடிவு பண்ணியிருக்காங்க… என்றார் மேஸ்திரி. அது என்னாவா… இருக்கும்னு ஆர்வமா கேட்டான் பெருமாள்.
அது வந்துப்பா… தமிழக அரசியல் களத்தில் பிடி கொடுக்காமல் கறார் காட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சட்ட ரீதியான சிக்கல்கள் மூலம் பணிய வைக்க டெல்லி மேலிடம் திட்டம் போட்டிருக்குப்பா…
அதாவது… உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான, சொத்துக்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு திடீரென்று உயிர் பிடிச்சிருக்கு….. இந்த வழக்கு குறித்து நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள இந்த வழக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. அப்ப எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பாங்க… அதாவது தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு ஒரு வாரம் முன்னாடி ஆப்பு அடிக்க பிளான் பண்ணியிருக்காங்க… அந்த அளவு டெல்லி பாஜக மேலிடம் எடப்பாடி மேல கொந்தளிப்போட இருக்காங்கனார் மேஸ்திரி.
இதுவும் சூப்பரா இருக்கே மேஸ்திரி என்றான் பெருமாள்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் மாநில நிர்வாகிகளிடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுதுப்பா… ஆதவ் அர்ஜுனா – புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கிய சாமிக்கு இடையே நடக்குற மோதல் விஜய்க்கே பெரும் தலைவலியா மாறியிருக்கு… என்றார் மேஸ்திரி. அரசியல் கட்சிகளில் இதெல்லாம் சகஜம் தானே மேஸ்திரி என்றான் பெருமாள். யாரு… எங்க போட்டி போடுறதுனு பெரிய கலவரமே நடந்துட்டு இருக்குப்பா… என்றார் மேஸ்திரி. எங்க போட்டியிட்டா என்ன. எதுக்கு தொகுதி… எங்க நின்னாலும் பெரிசா பிரயோஜம் இல்லையே… பிறகு எதுக்கு தொகுதிய பத்தி கவலைப்படனும்னு கேட்டான் பெருமாள். அரசியல்ல அப்படியெல்லாம் பேசக்கூடாதுப்பா… என்றார் மேஸ்திரி.
என்ன மேஸ்திரி… ஒரே பரபரப்பா இருந்துச்சு ரெண்டு நாளா… கடைசியில புஸ்சுனு போச்சுனு சொன்னான் பெருமாள். ஆமாப்பா… விஜய் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் ஓட்டு வாங்குவாருனு சொல்றாங்க…
விஜய்… அதிமுக கூட்டணிக்குள்ள வராததுக்கு எடப்பாடியும் ஒரு காரணம். ஆனா எடப்பாடி மட்டும் காரணம் இல்ல… இதுக்கு பின்னாடி மத அமைப்புகள், சர்வதேச அமைப்புகள், பல்வேறு லாபிகள் பின்னணி வேலை பார்த்துருக்காங்க… எப்படி இருந்தாலும்… தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு யோகம்னு ஜோசியக்காரர் சொன்னது தான் நினைவுக்கு வருதுப்பா… என்றார் மேஸ்திரி… இப்ப பாஜக நாம பேசாம எடப்பாடிய கழட்டி விட்டுட்டு வெளியே வந்திரலாமானு யோசிக்கிறாங்க… இல்லாட்டி அண்ணாமலைய கொம்பு சீவி விடலாமானும் யோசிக்கிறாங்க… ஏதாவது ஒரு கலவரம் நடக்கும் பாரேன்னு சொல்லி… ஆயா கடையில வாங்கு வாழைக்காய் பஜ்ஜியையும், ஏலக்காய் மசால் டீயையும் பெருமாளுக்கு குடுத்தார் மேஸ்திரி.



