மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு குடியிருப்பில் மின்சார வாகன (EV) சார்ஜிங் பாயிண்ட் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்தது எப்படி? நேற்று நள்ளிரவு வீட்டில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சார்ஜிங் பாயிண்டில் மின்கசிவு ஏற்பட்டு வெடித்துள்ளது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீது தீ பரவியதால், விபத்தின் தீவிரம் பலமடங்கு அதிகரித்தது. சிலிண்டர்கள் வெடித்த சத்தம் அப்பகுதி முழுவதையும் அதிர வைத்தது.
தப்பிக்க முடியாத எலக்ட்ரானிக் லாக்: வீட்டின் பிரதான கதவு ‘எலக்ட்ரானிக் லாக்’ (Electronic Lock) வசதி கொண்டது. தீ விபத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாலும் கதவு தானாகவே லாக் ஆகிவிட்டது. இதனால் உள்ளே இருந்தவர்கள் தீயின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். எனினும், புகை மூட்டத்தாலும் தீக்காயங்களாலும் 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



