மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் வலுவடைந்து வரும் சூழலில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டுகளை (Cluster Bombs) வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையா?
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் தளபதி கோலாம்ரெசா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகவே ஈரான் தற்போது டெல் அவிவ் நகரை இலக்கு வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளைப் பயன்படுத்துகிறது. இவை காற்றில் பிரிந்து பரந்த பரப்பளவில் விழுவதால், அவற்றை இடைமறித்து அழிப்பது சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்தா?
நேற்று மாலை ஈரானின் புஷெர் (Bushehr) அணுசக்தி நிலையத்திற்கு அருகே ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அணுசக்தி நிலையத்திற்குப் பாதிப்பில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ராஸி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இரு நாடுகளும் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமாதானப் பேச்சை நிராகரித்த மோஜ்தபா காமேனி
ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் மோஜ்தபா காமேனி கலந்துகொண்டார். அப்போது, போர் நிறுத்தத்திற்கான அனைத்து ஆலோசனைகளையும் அவர் அதிரடியாக நிராகரித்துள்ளார். “அமெரிக்காவும் இஸ்ரேலும் அடிபணிந்து, நஷ்டஈடு வழங்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியும் உணவுப் பஞ்சமும்
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் விலை 3% அதிகரித்துள்ளது.
தற்போது ஈரானின் கடற்கரை பகுதிகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா குறிவைத்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடித்தால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.



