நாட்டில் எல்பிஜி (LPG) விநியோக நிலவரம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் எல்பிஜி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும், நாட்டில் போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிக திறனுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல இயங்கி வருவதாகவும், எங்கும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
உள்நாட்டு நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தடையற்ற எல்பிஜி விநியோகத்தை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் பயணம் செய்த எல்பிஜி கேரியர் ‘ஷிவாலிக்’ விரைவில் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை அடையும் என கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், பாரசீக வளைகுடாவிலிருந்து புறப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ‘ஷிவாலிக்’ எல்பிஜி கப்பல் இன்று மாலை சுமார் 5 மணியளவில் முந்த்ரா துறைமுகத்தை அடையும் என்று தெரிவித்தார். கப்பல் வருகைக்கு முன்பே தேவையான ஆவணங்கள், முன்னுரிமை நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் துறைமுகத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சரக்குகளை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் பணியாற்றி வரும் அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித சம்பவமும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவலின்படி, 611 இந்திய மாலுமிகளுடன் 22 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் உள்ள பாரசீக வளைகுடா கடற்பரப்பில் இருப்பதாகவும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுமார் 81,000 டன் முர்பன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லாட்கி’ என்ற இந்தியக் கப்பல் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கி பயணம் செய்து வருவதாகவும், அது நாளை முந்த்ரா துறைமுகத்தை அடையும் என்றும் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.



