பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று, தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 15 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, வாசுதேவநல்லூர் பகுதியின் ஒரே ரயில் நிறுத்தமான பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் விரைவு ரயிலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், 16101/16102 எண் கொண்ட தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 2) அனுப்பியுள்ள கடிதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும்: ஆனந்தன் அய்யாசாமி தனது கோரிக்கை மனுவில், “பாம்புக்கோவில் சந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் இந்த ரயில் நிறுத்தத்தால் பெரும் பயனடைவர். குறிப்பாக, தமிழகத்தின் எலுமிச்சை தலைநகராக விளங்கும் இப்பகுதியின் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் நிறுத்தம் வர்த்தக ரீதியாகப் பெரும் உதவியாக அமையும்” என்பதை வலுவாக வலியுறுத்தியிருந்தார்.
மத்திய அமைச்சருக்கு நன்றி: பொதுமக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, உடனடியாக ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு, தென்காசி மாவட்ட மக்கள் சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் ஆனந்தன் அய்யாசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள இதர ரயில்வே கோரிக்கைகளும் இதேபோல் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.



