டெல் அவிவ்: “பயங்கரவாதம் என்பது உலக அமைதிக்கு எதிரானது; அதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது” என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடியை, டெல் அவிவ் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வந்து கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். இரு நாட்டுத் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு (நெசெட்) பிரதமர் மோடி வருகை தந்தபோது, அங்கிருந்த எம்.பி.க்கள் அனைவரும் “மோடி… மோடி…” என முழக்கமிட்டு அவருக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய அரசியல் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இதன் மூலம் பெற்றுள்ளார்.

“இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு” – பிரதமர் நெதன்யாகு பாராட்டு
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவை “சிறந்த நட்பு நாடு” என்று புகழ்ந்தார். அவர் பேசுகையில்:
இந்தியாவும் இஸ்ரேலும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல, அவை சகோதர நாடுகள்.
பிரதமர் மோடியின் வருகை இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2 மடங்கு அதிகரித்துள்ளது; புரிதல் 4 மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் யூதர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை போற்றத்தக்கது. இந்தியா ஒரு மிகச்சிறந்த சக்திவாய்ந்த தேசம், என்று தெரிவித்தார்,
பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
1. பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு: “அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் அடைந்த வேதனையை நான் உணர்கிறேன். மும்பை பயங்கரவாதத் தாக்குதலும், இங்கு நடந்த தாக்குதலும் ஒன்றே. பொதுமக்களைக் கொல்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை.”
2. பாலஸ்தீனப் பிரச்னை: “பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய சரியான தருணம் இது. இரு நாடுகளும் அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ இந்தியா என்றும் ஆதரவளிக்கும்.”
3. வரலாற்று உறவு: “இந்தியாவில் யூதர்கள் எவ்வித அச்சமுமின்றி வசிக்கின்றனர். இந்தியா யூதர்களின் தாய்நாடாகவே திகழ்கிறது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் பிணைக்கப்பபட்டது.”
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இரு நாட்டுப் பிரதமர்களும் மேற்கொண்ட ஆலோசனையில் சில முக்கிய பாதுகாப்பு முடிவுகள் எடுக்கப்பட்டன:
இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்சன சக்கரம்’ ஆயுதத் தயாரிப்பில் இணைந்து செயல்படுவது.
இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயன் டோம்’ (Iron Dome) ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குப் பகிர்வது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள்.
உலகளவில் கவனிக்கப்பட்ட பயணம்
பிரதமர் மோடி கடைசியாக 2017-ல் இஸ்ரேல் சென்றிருந்தார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி பயணித்த ‘இந்தியா ஒன்’ விமானத்தின் பாதையை ‘பிளைட்ரேடார் 24’ இணையதளத்தில் சுமார் 9,225 பேர் நேரலையில் கண்காணித்துள்ளனர். இது உலகளவில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
சந்திப்பின் முடிவில், “இந்தியா – இஸ்ரேல் இடையிலான உறவு அனைத்துத் துறைகளிலும் வலுப்பெறும்” எனப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



