‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை முறைகளில் பன்முகத்தன்மை இருப்பதால் கல்வித் தரம் பாதிக்கப்படாது; மாறாக சமத்துவமும் திறமையும் மேலும் வலுப்பெறும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழில் வெளியான தனது கட்டுரையில், நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், ஒரு தேர்வின் நம்பகத்தன்மை மீதான சந்தேகத்தை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு என்றும், தேர்வு நடத்தும் முறையை மட்டுமல்லாமல், மருத்துவச் சேர்க்கையை ஒரே தேசிய நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தீர்மானிக்கும் கொள்கையையே தமிழ்நாடு கேள்விக்குட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட்டை அறிமுகப்படுத்தியபோது, மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியம் குறையும், மருத்துவக் கல்வியில் கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கல் ஒழிக்கப்படும், திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவக் கல்வித் தரம் உயரும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த மூன்று நோக்கங்களையும் நீட் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பள்ளிக் கல்வியை மையமாகக் கொண்ட கற்றல் முறையிலிருந்து, அதிக கட்டண பயிற்சி மையங்களை மையமாகக் கொண்ட தேர்வு முறையாக நீட் மாறிவிட்டதாகவும், இதனால் நகர்ப்புற மற்றும் வசதி படைத்த மாணவர்கள் அதிக நன்மை அடையும் நிலையில், கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தாய்மொழி வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், பள்ளிக் கல்வி செயல்திறன், மதிப்பெண்களின் தரநிலைப்படுத்தல் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை வழங்கப்படுவதாகவும், நாடு முழுவதற்குமான ஒரே நுழைவுத் தேர்வு கட்டாயமாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீட் தேர்வில் தகுதித் தேர்ச்சி வரம்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதும், குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்காக சில நேரங்களில் தகுதிக்கான பெர்சென்டைல் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டிருப்பதும், ‘தகுதி’ என்ற பெயரில் முன்வைக்கப்படும் வாதத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்றும், மாநிலங்களின் தேவைகள் மற்றும் கல்வி சூழலுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை முறைகளை தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.



