“இது சினிமா கிடையாது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
“தொகுதிகளில் ஆய்வு செய்யும்போது அதிகாரிகளிடம் பேசுகிறோம். ஆனால் இதுவரை ஒரு டெண்டரும் விடப்படவில்லை. எந்தவொரு அடிப்படை பணிகளும் தொடங்கப்படவில்லை. இது விளம்பரத்திற்காகவோ, புகைப்படம் எடுப்பதற்காகவோ, ரீல்ஸ் போடுவதற்காகவோ நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல. பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், அரிசி விலை உயர்ந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கவனிக்காமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது சரியல்ல” என்றும் கூறினார்.
எல்.நினோ தாக்கத்தால் தமிழகம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த பிரேமலதா, பஞ்சம், வறட்சி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற காவல் மரணம் குறித்து பேசிய அவர், காவல்துறையினருக்கு ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை எந்த சட்டத்திலும் வழங்கப்படவில்லை என்றும், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படும் நபர்களை சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “மக்கள் விரும்புவதை அரசுகள் கேட்டு செயல்பட வேண்டும். நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம் இருப்போம். தமிழகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை; பழைய நிலையே தொடர்கிறது” என்றார்.
“இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.



