மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான இருதரப்பு பிரச்சினை அல்ல; அது கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச கோரிக்கை மட்டுமே. எனவே, அந்த விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழ்நாடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்.
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, மேகேதாட்டு அணை விவகாரத்தை இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக ஏற்றுக்கொண்டதற்கு சமமாகிவிடும் என்றும், அதன்பிறகு அணை கட்டக்கூடாது என்பதே கோரிக்கையாக இருக்காது; அணையின் கொள்ளளவு மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நடைமுறைகள் குறித்தே விவாதம் நடைபெறும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதை பாமக ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதாகவும், அதைவிட மோசமான பாதிப்பை கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகே நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை அரசு ஏற்காமல், நேரடியாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை முதல்வர் விஜய் கைவிட்டு, அதற்கு பதிலாக சட்டப்போராட்டங்கள் மூலம் மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



