பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட வீடியோ அறிக்கையில், மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ராகுல் காந்தி பாராட்டினார்.
நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் எதிர்காலம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க அமைதியான முறையில் போராடியதாகக் கூறிய அவர், அந்தப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதேநேரத்தில், மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், “இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது; அஞ்ச வேண்டாம்” என்றும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் இந்திய இளைஞர்களின் வெற்றி என்றும், மக்களின் விருப்பமே ஜனநாயகத்தில் உயர்ந்தது என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு, பெல்லட் துப்பாக்கி, தடியடி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை என்றும், இறுதியில் அரசாங்கமே மக்களின் விருப்பத்துக்கு பணிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை சீர்திருத்தம் தொடர்பாக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியின் முயற்சியை பாராட்டிய பிரியங்கா காந்தி, இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், மக்களின் குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.



