ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் ராஞ்சியில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுக்கும் ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்துக்கும் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தலைமையிலான அரசு குழுவும், ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் இதில் பங்கேற்றன. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, தங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைக்குள் அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால், திங்கள்கிழமை மாநில சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் தலைவர், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இருப்பினும், ஜேபிஎஸ்சி தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
இதுகுறித்து அமைச்சர் சுதிவ்யா குமார் கூறுகையில், “மாணவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும் கவலைகளையும் அரசு முழுமையாக கேட்டறிந்துள்ளது. அவர்களின் கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலித்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கிடையில், ஏழு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ தலைமையிலான மற்றொரு குழுவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக எட்டு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



