கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணியின் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்தார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 89-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் தனது 100-வது சிக்சரை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
லாஹிரு குமாரா வீசிய பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்று பேக் ஆஃப் லெந்த்தில் வந்தது. அந்தப் பந்தை பண்ட் தனது வழக்கமான அதிரடி பாணியில், கால்களை நகர்த்தாமல் குனிந்து வலது தோளுக்கு மேலாக தட்டி விட்டார். பந்து டீப் ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு வெளியே சென்றது. இதுவே அவரது 100-வது சிக்சராக அமைந்ததுடன், இந்த இன்னிங்சில் அவர் அரைசதம் அடித்த ஷாட்டாகவும் அமைந்தது.
அதிக சிக்சர்கள் – குறைந்த இன்னிங்ஸில் பண்ட் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ரிஷப் பண்ட் 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் – 138 சிக்சர்கள் – 220 இன்னிங்ஸ்கள்
பிரெண்டன் மெக்கல்லம் – 107 சிக்சர்கள் – 176 இன்னிங்ஸ்கள்
ஆடம் கில்கிறிஸ்ட் – 100 சிக்சர்கள் – 137 இன்னிங்ஸ்கள்
ஜானி பேர்ஸ்டோ – 100 சிக்சர்கள் – 178 இன்னிங்ஸ்கள்
178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. ஜெய்ஸ்வால், பெர்னாண்டோ பந்தில் கட் ஷாட் ஆட முயன்று எட்ஜ் கொடுத்து டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார். இதனால் அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரிகளுடன் நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். கடினமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகள் சில இடங்களில் பிடித்து திரும்பிய நிலையிலும், அவர் சிறப்பாக சமாளித்தார்.
லோகேஷ் ராகுல் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டினார். 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த அவர், பிரபத் ஜெயசூரியா பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 8 ரன்களில் ஜெயசூரியா பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.
துருவ் ஜுரெல் 7 ரன்களில் பெர்னாண்டோவின் ஷார்ட் பிட்ச் பந்தை லெக் சைடில் விளையாட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட்டை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பந்துகளால் சோதித்தனர். ஆனால், பண்ட் அவற்றை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார். குமாரா வீசிய ஷார்ட் பிட்ச் பந்திலேயே தனது 100-வது சிக்சரை அடித்து வரலாறு படைத்தார்.
69 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், இறுதியில் குமாரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பாக குமாரா தனது ஸ்பெல்லின் முதல் பந்திலேயே பண்ட் கிரீஸை விட்டு இறங்கி வந்து அடித்த சிக்சரை எதிர்கொண்டிருந்தார். பின்னர் தனது பந்திலேயே பண்ட்டின் 100-வது சிக்சரும் அடிக்கப்பட்டதால், பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தியதும் குமாரா ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் குமாராவின் ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 179 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, மொத்தமாக 357 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.



