இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் நிர்வாக மேலாண்மை கவனித்து வரப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 202 பட்டியலைச் சார்ந்த திருக்கோயில்கள், 824 பட்டியலைச் சாராத திருக்கோயில்கள் என மொத்தம் 1026 திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான திருக்கோயில்கள் சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ளதால், அவற்றிற்கு சொந்தமாக பலகோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. அச்சொத்துகளை மேலாண்மை செய்வதற்கும், நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளை கண்காணித்து, அவற்றில் திருக்கோயில்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், திருக்கோயில்களின் அசையா சொத்துகளைக் கண்காணித்து, வருவாய் ஈட்டிட ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கென தனியே ஓர் இணை ஆணையர் அலுவலகம் ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருவள்ளூரில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், எம்எல்ஏ.க்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி துரை சந்திரசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பொன் பாண்டியன், ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ், மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



