அதிமுகவில் நிலவி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான வைகைச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள விலகல் கடிதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தான் மட்டும் நன்றாக இருக்க நினைப்பவர் நல்ல தலைவர் அல்ல”
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள வைகைச்செல்வன், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒரு தலைவர், தானே அழிந்தால்கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றிபெற வேண்டும் என நினைப்பார். ஆனால் இயக்கமும், தொண்டர்களும் அழிந்தால்கூட தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல தலைவராக இருப்பதில்லை.”
அடையாளத்தை இழந்த அதிமுக:
திமுக எதிர்ப்பு என்ற கொள்கையிலிருந்து அதிமுக சமரசம் செய்துகொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், “திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது. இதனால் கட்சி வெற்றிப் பாதையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு”
கட்சியில் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், புறக்கணிப்பையும் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சர், “தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையில்கூட, அதிமுகவுக்காகத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் தற்போது உணர்ந்து கொண்டேன். மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இந்த இயக்கத்தோடு இணைந்து பணியாற்றிவிட்டு, தற்போது விலகுவதை எண்ணிப் பார்க்கும்போது என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தவெக-வை நோக்கி நகரும் அதிமுக நிர்வாகிகள்:
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சில மாவட்டச் செயலாளர்களும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
அதிமுகவிலிருந்து விலகும் இந்த முக்கிய தலைவர்கள் அனைவரும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் செயல்பாடுகள் மீதே தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. வைகைச்செல்வனின் இந்த விலகல் முடிவு, அதிமுகவில் மேலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



