பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள கில்லி சஹலான் பகுதியில் நடைபெற்ற ‘மாற்றத்துக்கான பேரணியில்’ கலந்துகொண்டு பேசிய அவர், மாநிலத்தின் அரசியல் களம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
“சின்ன தம்பி காலம் முடிந்துவிட்டது”
கடந்த காலங்களில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறித்துப் பேசிய அமித் ஷா, “பஞ்சாபில் பாஜக ஒரு துணை சக்தியாக அல்லது ‘சின்ன தம்பியாக’ (கூட்டணியின் சிறிய கட்சியாக) இருந்த காலம் இனி முடிந்துவிட்டது. இன்று முதல் பஞ்சாபில் பாஜக தனது சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரச்சாரத்தைத் தொடங்குகிறது,” எனத் தெரிவித்தார்.
மேலும், “மக்கள் ஏற்கனவே காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பளித்துச் சோதித்துவிட்டீர்கள். இப்போது பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். போதைப்பொருள் மற்றும் கடன் சுமையில் இருந்து பஞ்சாபை மீட்க ‘இரட்டை இன்ஜின்’ அரசு பாடுபடும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மதமாற்றத் தடைச் சட்டமும் சீக்கிய குருமார்களும்
இந்து மற்றும் சீக்கிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அமித் ஷா பேசியதாவது:
“நமது சீக்கிய குருமார்கள் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராகத் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், இத்தகைய மதமாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கருதுகின்றன. 2027 தேர்தலில் பாஜகவுக்கு அதிகாரம் அளித்தால், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கடுமையான மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும்.”
கூட்டணி முறிவு முதல் தனித்து போட்டி வரை
வேளாண் சட்டங்கள் காரணமாக 2020-ல் சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
2022 தேர்தல்: 73 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றது (வாக்கு சதவீதம்: 6.60%).
2024 மக்களவைத் தேர்தல்: வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதம் 19%-ஆக உயர்ந்தது. இந்த வாக்கு சதவீத உயர்வு அளித்துள்ள நம்பிக்கையில், 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக முடிவெடுத்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு உறுதி
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அமித் ஷா, பஞ்சாப் அரசை அரவிந்த் கேஜ்ரிவாலின் ‘ஏடிஎம்’ (ATM) ஆக மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
“நாட்டில் நடைபெறும் ஹெராயின் கடத்தலில் 45% பஞ்சாப் மாநிலத்துடன் தொடர்புடையது. நக்ஸல் தீவிரவாதம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதில் காட்டிய அதே உறுதியை போதைப்பொருள் ஒழிப்பிலும் காட்டுவோம். பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் போதைப்பொருள் வர்த்தகம் வேரறுக்கப்படும்” என்று அவர் சூளுரைத்தார்.



