தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தும் தமிழக அரசின் அரசியல் நடவடிக்கைக்கு அதிமுக துணை போகாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதா எதுவும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டுவது அரசியல் நாடகமாகும்.
காவிரி – மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு புறக்கணித்துவிட்டு, தாக்கல் செய்யப்படாத மசோதாவை காரணம் காட்டி எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அரசு மடைமாற்று அரசியலில் ஈடுபடுகிறது.
எனவே, இந்த அரசியல் அரங்கேற்றத்துக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது,” என்று அதிமுக தனது பதிவில் தெரிவித்துள்ளது.



