தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக எம்.பி.க்களின் கருத்துகளை அறிய இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதனால் மொத்தம் 37 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா 2 எம்.பி.க்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.பி. என மொத்தம் 19 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. சுதா மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்.பி.க்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராகவும், மசோதாவை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், “முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர் எண்ணிக்கையும், தமிழகத்திற்கான 39 தொகுதிகளும் தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை மூலம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடாது என்பதே கூட்டத்தின் ஒருமித்த கருத்தாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அவையின் செயல்திறன் பாதிக்கப்படும்,” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “தொகுதி மறுவரையறையால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளோம். மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர் எண்ணிக்கையும், தமிழகத்திற்கான 39 தொகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தினால், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பே குறைந்து விடும்,” என்றார்.



