காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்று ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உச்ச நீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு காவிரி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகேதாட்டு அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, கீழ்ப்பகுதி மாநிலங்களின் குறிப்பாக தமிழகத்தின் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து திடீரென பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முக்கியமான விவகாரங்களில் மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பின்னணி
முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி, “2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காவிரியின் குறுக்கே கர்நாடகா எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? கர்நாடகா இதற்கான ஒப்புதலை பெற்றுள்ளதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி, “2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை” என தெரிவித்தார்.
மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அந்தந்த மாநில எல்லைக்குள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக காவிரி நீரை பயன்படுத்திக் கொள்ளவும், திட்டங்களை மேற்கொள்ளவும் கட்டுப்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், பிலிகுண்டுலுவில் நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்து அளவுக்கும், உண்மையில் வந்த நீரின் அளவுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



