மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவையில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழகத்தின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து ஒன்றிய அரசிடம் மேகேதாட்டு அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தினேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த ‘சோபா மாடல்’ முதல்வர் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.



