மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3,428 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர். விருதுநகர் எம்எல்ஏ செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற நாங்கள் நால்வரும் மாவட்டத்தின் நான்கு தூண்களாக இருந்து மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, “அமைச்சர் கீர்த்தனாவுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக மக்கள் பணியாற்றி வருகிறோம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து விருதுநகர் மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
மேலும், “மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த வாரம் ராஜபாளையத்தில் ‘விஜய் விஜயம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், மக்கள் தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் அந்த செயலி மூலம் பதிவு செய்தால், 24 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்படும் என்றும், விரைவில் சிவகாசி உள்ளிட்ட பிற தொகுதிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.



