பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாற்றம் வேண்டுமென்றே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியிலும், எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளன. ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் பெண்களை அவதூறாக சித்தரித்ததில்லை.
எனக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது வேறு விஷயம். என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். ஆனால், அதிமுக பெண்களை தவறாக சித்தரிப்பவர்களை ஊக்குவிப்பது உங்கள் தலைமைக்கு அழகா? இதுபோன்ற நிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் அனுமதித்திருக்க மாட்டார். இதை மக்களும், அதிமுக தொண்டர்களும் கவனித்து வருகின்றனர்.
மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் ‘சிங்கப் பெண் படை’ உருவாக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர அச்சப்படுகின்றனர். காவல்துறையின் செயல்பாடுகளிலும் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.
என்னைப் பற்றி விமர்சிப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், பெண்களை இழிவுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏற்க முடியாதது. விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்துபவர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்ற நிலை உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு திறமையான காவல் கண்காணிப்பாளரை நியமித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரத்தில், காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.



