தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவு, ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரும் சவாலாக அமையும் என்றும், இதன் பின்னணியில் பாஜகவின் தந்திரோபாயக் கணக்குகள் ஒளிந்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர் மா. பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இறுதி ஆதாயம் பாஜகவிற்கே கிடைக்கும் வகையில் களம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் தனித்து நிற்பதால் ஏற்படப்போகும் 8 முக்கிய மாற்றங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்:
1. திமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டை
கடந்த தேர்தலில் கருப்பு-சிவப்பு மிதிவண்டியில் வந்து வாக்களித்ததன் மூலம் மறைமுகமாக திமுகவிற்கு ஆதரவளித்த விஜய், இந்த முறை தனித்து நிற்பதால் அவரது ரசிகர்களின் ஓட்டுகள் அப்படியே திமுகவிடமிருந்து பிரியும். இது ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பாதிக்கும்.
2. சிறுபான்மையினர் வாக்குகள் மாற்றம்
வழக்கமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வாக்குகள், இந்த முறை விஜய்யின் பக்கம் சாய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாமல்லபுர இப்தார் நிகழ்வில் விஜய் பேசிய விதம் சிறுபான்மையினரை அவர் பக்கம் ஈர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.
3. புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள்
தமிழகத்தில் உள்ள சுமார் 12 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் ‘ஜென்-ஸி’ (Gen-Z) எனப்படும் இளம் தலைமுறையினரின் வாக்குகள் விஜய்க்குப் பெரும்பான்மையாகச் செல்லும். இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே பேரிழப்பாக அமையும்.
4. மகளிர் வாக்குகள் பிரிப்பு
திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அக்கட்சிக்கு இருந்த 2 கோடி பெண்களின் ஆதரவில், விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். பெண்களின் வாக்குகளைப் பிரிக்கும் வல்லமை விஜய்க்கு மட்டுமே இருப்பதாக பாண்டியராஜ் குறிப்பிடுகிறார்.
5. அரசு ஊழியர்களின் அதிருப்தி
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். கடந்த தேர்தலில் தேர்தல் பணியில் இருந்த இவர்கள் மடைமாற்றிய வாக்குகள், இந்த முறை விஜய்க்கு சாதகமாக அமையலாம்.
6. பாஜகவின் வியூகம் என்ன?
விஜய்யை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது எளிதான காரியம் என்றாலும், அவர் தனித்து நிற்பதே தங்களுக்கு லாபம் என டெல்லி தலைமை கருதுகிறது.
திமுகவின் வாக்குகள் பிரிந்து, மெஜாரிட்டி கிடைக்காத சூழல் உருவாக வேண்டும்.
“குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது” போல, தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
7. எம்.ஜி.ஆர் காலத்துப் பாதிப்பு?
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இணையாக அல்லது அதைவிட ஒரு படி மேலாகவே விஜய்யின் வருகை இருக்கும் என கணிக்கப்படுகிறது. அவர் வாங்கும் ஒவ்வொரு 100 வாக்குகளில் 70 வாக்குகள் திமுகவின் வாக்குகளாகவே இருக்கும் என்பது அரசியல் கணக்காளர்களின் கணிப்பு.
திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்திருந்தாலும், தனித்து நிற்கும் விஜய் ஏற்படுத்தும் தாக்கம் அக்கூட்டணியின் வெற்றிக் கனவைச் சிதைக்கக்கூடும். “இழப்பதற்கு எதுவுமில்லை” என்ற நிலையில் உள்ள பாஜக மற்றும் அதிமுகவிற்கு மத்தியில், “இழக்க நிறைய வைத்திருக்கும்” திமுக, கடிகாரத்தை விட வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



