சொத்துப் பிரச்னை காரணமாகத் தம்பி குடும்பத்தினரைக் கொலை வெறியுடன் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 4) புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னணி என்ன?
புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசித்து வருபவர் மரிய குளோத். இவர் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் தம்பி ஆவார். அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி, மரிய குளோத்தின் வீட்டிற்குள் புகுந்த அமைச்சர் மரிய வில்சன், அவரது தம்பி மற்றும் தம்பியின் மனைவி கேர்லைன் கிளேட் (41) ஆகியோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு
அமைச்சரின் சகோதரர் மனைவி கேர்லைன் கிளேட் அளித்த புகாரின் அடிப்படையில், லாஸ்பேட்டை போலீஸார் அமைச்சர் மரிய வில்சன் மீது கொலை முயற்சி, அத்துமீறி நுழைதல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்ற மனு தள்ளுபடி
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த மரிய வில்சன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், சம்பவத்தை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வைரலான சிசிடிவி காட்சி
இதற்கிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்டார். அந்தச் சமயத்தில், அவர் உருட்டுக்கட்டையுடன் தம்பி வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபடும் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.
இதன்பின்னர், தேர்தல் முடிவடைந்து மரிய வில்சன் வெற்றி பெற்று தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். தேர்தல் முடிந்த கையேடோடு லாஸ்பேட்டை போலீஸாரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
நாளை நீதிமன்றத்தில் ஆஜராகக் கெடு
வழக்கு விசாரணைகளுக்கான வாய்தாக்களுக்கு அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். தற்போது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதைப் பெற்றுக் கொள்ள அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாளை (ஜூலை 4) புதுச்சேரி ஜே.எம்.1 (JM-1) நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



