திரைப்பட விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடிகைகளின் வீடியோக்களைத் தவறான கோணங்களில் படம்பிடித்துப் பரப்புவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘காந்தாரா’ திரைப்பட நடிகைகள் ருக்மணி வசந்த் மற்றும் சப்தமி கௌடா ஆகியோர் சமூக வலைதளங்களில் கூட்டாகக் குரல் எழுப்பியுள்ளனர்.
சர்ச்சை என்ன?
சமீபகாலமாகப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகளைப் படம்பிடிக்கும்போது, ஒருசிலர் வேண்டுமென்றே அவர்களது உடல் உறுப்புகளைத் ‘ஜூம்’ (Zoom) செய்தும், ஆபாசமான கோணங்களிலும் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்று திரண்ட நடிகைகள்
இது குறித்து ருக்மணி வசந்த் மற்றும் சப்தமி கௌடா ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாவது:
“திரைப்படத்துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள், மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் பகிரப்படுகின்றன. எங்களது உடல் தேவையற்ற முறையில் ஜூம் செய்யப்படுகிறது.”
கண்ணியம் காக்க கோரிக்கை
இந்தச் செயல் அவமரியாதைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களது எதிர்ப்பைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளனர்:
கலைக்காகவே நாங்கள்: “நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் மட்டுமே இருக்கிறோம். வேண்டுமென்றே இப்படிப் பரப்பப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.”
எல்லை மீறல்: “இவை பெண்ணின் கண்ணியத்தை மீறுவதாகும். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. தொழில்முறை சார்ந்த இடத்திலும் அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.”
ஆதரவு: “இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தப் பிரச்னையைச் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.”
நடிகைகளின் இந்தத் துணிச்சலான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.



