பழநி கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் வினோத் சூர்யகுமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், “ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பழநி கோயில் நில விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களை பரப்பியதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வினோத் சூர்யகுமாரை கைது செய்தனர்.
பொது அமைதியை பாதிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தகவல்களை பரப்பியதாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி வினோத் சூர்யகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாகவும், இது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ். கார்த்திகேயன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. சரவணன், “மனுதாரர் ஒரு ஊடகவியலாளர். கோயில் நில நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், பொது நலன் கருதியும் பதிவுகள் வெளியிடப்பட்டன. அமைச்சருக்கு எதிராக தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.
அதேநேரத்தில், காவல்துறை தரப்பில், “மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும். அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சிப்பது மட்டுமே அரசுக்கு எதிரான அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமாகக் கருத முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “கோயில் சொத்து குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக அல்லது அமைச்சரின் உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது, மதம், இனம், மொழி, சாதி அல்லது சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் செயலாக கருத முடியாது. அவதூறான அல்லது தவறான தகவல்களை வெளியிட்டிருந்தாலும், அது அதிகபட்சமாக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 356-ன் கீழ் விசாரிக்கப்படக்கூடிய குற்றமாக மட்டுமே இருக்கும்; அது புலன் விசாரணைக்குரிய குற்றமல்ல” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வினோத் சூர்யகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர் தினமும் காலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது.



