நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது ராஜினாமா குறித்து தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க விரும்பவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்ததைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இருந்த இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



