வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வை விரும்பவில்லை; குழப்பத்தையே ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசு இந்த விவகாரத்தில் உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மட்டத்திலேயே வினாத்தாள் கசிவு சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வின் புனிதத்தன்மையை குலைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்” என்றார்.
மேலும், “வினாத்தாளை கசியவிட்டது, வாங்கியது, விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், “விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கும் நிலையில், தொடர்ந்து புதிய நிபந்தனைகளை முன்வைத்து அவையின் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
“நீட் விவகாரத்தையும் மாணவர்களின் உணர்வுகளையும் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை முடக்குகிறது. விவாதம் நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான் அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு தீர்வைவிட இடையூறு செய்வதில்தான் ஆர்வம் உள்ளது” என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளிடம் மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறிய அவர், “பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களின் பேச்சை தடுக்காமல், ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபடுங்கள்” என்றும் வலியுறுத்தினார்.



