முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, தலைவணங்கி மலரஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது அரசியல் ஆசானும் தந்தையுமான கலைஞர் கருணாநிதியின் நினைவைப் போற்றி, தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இறுதி மூச்சு வரை உழைத்த உன்னத தலைவர்!
தனது அறிக்கையில் கலைஞரின் அயராது உழைக்கும் பண்பை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், “வயது மூப்படைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த பின்பும் கூட, சற்றும் ஓய்வின்றி தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழினத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் மட்டுமே உழைத்திட்ட உன்னத தலைவர் கலைஞர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
வெற்றியையும் தோல்வியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு
மேலும், கலைஞரிடம் இருந்து தான் பெற்ற ஆற்றல் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர்:
“என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியைச் நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் எப்போதும் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் மறைந்து எங்களுள் நிறைந்த போது, உங்களது அந்த அசாத்திய ஆற்றலைத்தான் நான் வேண்டினேன்.
அந்த ஆற்றலோடுதான் கடந்த காலங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் வகையில் மிகச்சிறந்த முன்னேற்றப் பாதையில் நாம் அழைத்துச் சென்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.
“உறுதியாய்ச் சொல்கிறோம்.. இருளை விரட்டுவோம்!”
சமீபத்திய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ள அவர், தற்காலிகப் பின்னடைவைக் கண்டு சோர்ந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
“தற்போது நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும், உங்களது ஆற்றல் என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி, ரத்தமும் சதையுமாக வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் நிறைந்திருக்கிறது. எனவே, நாம் உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை மிக விரைவில் எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாகச் சூளுரைத்துள்ளார்.
கலைஞரின் 103-வது பிறந்தநாளில், தற்காலிகத் தொய்விலிருந்து மீண்டு, மீண்டும் திமுகவின் வெற்றிக்கான அரசியல் பயணத்தை உத்வேகத்துடன் தொடங்குவோம் என்ற திமுக தலைவரின் இந்த அறிக்கை, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அக்கட்சித் தொண்டர்களிடையே புதிய எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



