வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (த.வெ.க) சேர்ந்த நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி எம்.எல்.ஏ வி.ஜி.சரவணனுடன் இணைந்து கட்சிப் பணி செய்து வந்துள்ளார். அப்போது, த.வெ.க தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
வி.ஜி.சரவணனின் லாட்டரி தொழிலில் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்காக ராமநாதபுரத்தில் உள்ள முகவர் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறி, கடந்த மே 3-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை
பயணத்தின் போது சாயல்குடி அருகே காரில் வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதை அறியாமல் குடித்த பெண் மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து, பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கொலை மிரட்டல்
மயக்கம் தெளிந்து பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து தட்டிக்கேட்ட போது, “உன்னை சரணவன்தான் அழைத்து வரச் சொன்னார், அவரிடமே கேட்டுக்கொள்” என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம்” என அவர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வெளியே கூறினால் குழந்தையைக் கொலை செய்துவிடுவதாகக் குற்றவாளிகள் இருவரும் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
நடவடிக்கை கோரி புகார்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளார். தற்போது இப்புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில்:
“த.வெ.க ஆட்சியிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னை ஏமாற்றி, அச்சுறுத்தி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் இருவருக்கும் சட்டம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”
என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



