“நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா?” என்று மக்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக பகிரங்கமாகக் கருத்து கேட்டுள்ளார் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தகவல் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்திருந்த லாரன்ஸ், இதுதொடர்பான தனது இறுதி முடிவை விரைவில் அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் சுமார் 18 நிமிடங்கள் ஓடக்கூடிய விரிவான வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு சுவாரசியமான குட்டி கதையுடன் அந்த வீடியோவைத் தொடங்கும் ராகவா லாரன்ஸ், தனது அரசியல் சிந்தனை மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பின்னணி குறித்து பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு முதல் சீமான் விமர்சனம் வரை: அரசியலின் தொடக்கப்புள்ளி!
தனது சமூகப் பணிகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து அந்த வீடியோவில் லாரன்ஸ் பேசியதாவது:
“திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்குள் வர வேண்டும். நான் செய்து வரும் சமூக சேவைப் பணிகள் குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என் தகுதிக்கு உட்பட்டு, என்னால் முடிந்தவரை அந்தப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டு வருகிறேன்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நான் பங்கேற்றேன். அதன்பிறகு, அரசியல் கட்சித் தலைவரான அண்ணன் சீமான் என் மீது ஒரு விமர்சனத்தை வைத்தார். அதற்கு நான் தகுந்த விளக்கமும் பதிலும் அளித்திருந்தேன். அதுதான் நான் அரசியலை நோக்கி நகர்வதற்கான முதல் தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்று கருதுகிறேன்.”
ரஜினி, விஜய் மற்றும் தாயாரின் அறிவுரை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் அரசியல் முடிவுகள் தனது குடும்பத்தில் ஏற்படுத்திய விவாதங்கள் குறித்தும் லாரன்ஸ் மனம் திறந்துள்ளார்.
“கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி சார் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கருத்துக்கள் தீவிரமாக எழுந்தபோது, அவருக்கு ஆதரவாகச் செயல்பட நான் விரும்பினேன். அப்போது மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. இதுகுறித்து எனது தாயாரிடம் பேசியபோது, ‘உனக்கு அரசியல் வேண்டாம்’ என்று என் அம்மா தடுத்துவிட்டார். அதன் பின்னர் கரோனா தொற்று பரவல் சூழல் காரணமாக, தான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் முறைப்படி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எனது நீண்டகால நண்பரான விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவரது திரைப்பயணத்தில் நானும் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய செய்தி குறித்தும், அவரது உழைப்பு குறித்தும் மீண்டும் எனது அம்மாவிடம் பேசினேன். அப்போதும், ‘நமக்கு அரசியல் வேண்டாம்’ என்றே அம்மா மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து எனது நண்பர்களுடனும் நான் தொடர்ந்து விவாதித்து வந்தேன்.”
தாயின் சம்மதமும், மாறும் முடிவும்:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது தாயாரின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை விவரித்த லாரன்ஸ், “தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானதும், என் நண்பர் (விஜய்) சரித்திரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறார். இதுகுறித்து மீண்டும் அம்மாவிடம் பேசினேன். நண்பரின் அந்த நேர்மையான முகத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும், நல்லவர்களுக்கு மக்கள் எப்போதும் வாய்ப்பு தருவார்கள் என்றும் அம்மாவிடம் எடுத்துரைத்தேன்.
அதைக் கேட்டு நெகிழ்ந்த அம்மாவும் எனது கருத்தை ஏற்றுக்கொண்டார். இறுதியாக, ‘நீ நினைத்ததைச் செய்’ என்று கூறி எனது அரசியல் விருப்பத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்” என்றார்.
“உங்கள் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்”
வீடியோவின் நிறைவாக மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை ராகவா லாரன்ஸ் விடுத்துள்ளார்: “அம்மாவின் சம்மதம் கிடைத்துவிட்டாலும், மக்களின் முடிவே இறுதியானது. எனவே, நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை எனது ரசிகர்களும், பொதுமக்களும் இந்த வீடியோவின் கமெண்ட் பகுதி மூலம் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களின் நேர்மையான கருத்துக்களுக்காகவும், முடிவுக்காகவும் நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த திடீர் கருத்துக்கணிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.



