23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், போட்டியை நடத்திய ஃபிஃபா அமைப்பு வரலாறு காணாத அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த உலகக் கோப்பையை விட இரு மடங்குக்கும் அதிகமாக சுமார் 1,500 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலகக் கோப்பைத் தொடரில், முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்றன. ஜூன் 11-ம் தேதி தொடங்கிய போட்டிகள் ஜூலை 19-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தன. உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
எதிர்பார்ப்பை மீறிய வருமானம்
கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பையில் ஃபிஃபாவுக்கு 760 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்திருந்தது. இந்த முறை அதிக அணிகள், அதிக போட்டிகள் என்பதால் 1,100 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமை, விளம்பர ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவற்றின் மூலம் சுமார் 1,500 கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் 430 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஐரோப்பாவில் இருந்து 38 சதவீதமும், வட அமெரிக்காவில் இருந்து 27 சதவீதமும் வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 அணிகள் குறித்து எழுந்த விமர்சனங்கள் தவிடுபொடியாகின
48 அணிகள் பங்கேற்பதால் போட்டித் தரம் குறையும், ரசிகர்கள் வருகை குறையும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை முறியடிக்கும் வகையில் 104 போட்டிகளையும் 66 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். போட்டி அரங்குகளில் சராசரியாக 99.7 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
டைனமிக் டிக்கெட் விலை… ஃபிஃபாவுக்கு கூடுதல் லாபம்
இந்த உலகக் கோப்பையில் ஆட்டத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை மாறும் “டைனமிக் பிரைசிங்” முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், டிக்கெட் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முக்கிய போட்டிகளுக்கான டிக்கெட் விலை ஆயிரக்கணக்கான டாலர்களை எட்டியது. அமெரிக்கா–பாராகுவே ஆட்டத்தின் குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,000 டாலராகவும், நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற ஸ்பெயின்–அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை 32,970 டாலராகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரங்களுக்கு ஏமாற்றம்
உலகக் கோப்பையால் சுற்றுலா, ஹோட்டல், உள்ளூர் வணிகம் பெரிதும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிகளை நடத்திய பல நகரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் ஹோட்டல் முன்பதிவுகளும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள பப், பார்கள் மற்றும் உணவகங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக லாபம் பெற்றவர்கள்
உலகக் கோப்பை மூலம் ஃபிஃபா, ஒளிபரப்பு நிறுவனங்கள், ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள், விளையாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்த நிறுவனம் 30 விநாடி விளம்பர இடங்களை பல லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்ததாகவும், அடிடாஸ், கோககோலா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரசிகர்களுக்கான அணிகளின் ஜெர்சிகள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதேபோல், உலகக் கோப்பையை ஒட்டி நடைபெற்ற விளையாட்டு பந்தயங்களில் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



