பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306 மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் கருங்கல் பாறைகள் மற்றும் ஜல்லியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்று வரும் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான தரமான கற்கள் நீண்டகாலமாக இந்த மாவட்டங்களிலிருந்தே கிடைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேரளாவில் பெரிய அளவிலான உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான தரமான கற்கள் குறைந்த அளவிலேயே கிடைப்பதால், தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெருமளவில் தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களிலிருந்தே பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விநியோகச் சங்கிலியை பாதித்து, கட்டுமானப் பணிகளில் தடை மற்றும் தாமதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்களின் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் பிராந்திய இணைப்பு, சரக்குப் போக்குவரத்து, வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்றும், விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மற்றும் வல்லார்படம் சர்வதேச கன்டெய்னர் பரிமாற்ற முனையத்துடன் தடையற்ற இணைப்பை ஏற்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் கொள்கை நோக்கத்தை முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ள கேரள முதல்வர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற முக்கிய திட்டங்களுக்குத் தேவையான கருங்கல் ஜல்லி தடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் வகையில், உரிய தளர்வுகள் அல்லது மாற்று நடைமுறைகளை பரிசீலிக்குமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.



