மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டரீதியான முயற்சிகளுக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பும், 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது ஏற்க முடியாதது என விமர்சித்தார்.
நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக அரசு அந்த உத்தரவை முழுமையாக பின்பற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ரூ.9,000 கோடி மதிப்பில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை தமிழகம் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாது என்றும், அந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 2019-ஆம் ஆண்டு கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தமிழகத்திற்கு செய்யப்பட்ட துரோகம் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், மேகேதாட்டு விவகாரத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்து தமிழக நலன்களை விட்டுக்கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடாமல், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு அளிப்பதே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வழியாக அமையும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.



