தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும் என்ற உறுதியான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது, தமிழகத்தின் இயற்கை வளங்களை மீண்டும் எல்லை தாண்டி சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே கருதப்பட வேண்டும் என்றார்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக தமிழகத்தின் கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் தேவைப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ள நிலையில், தனது மாநிலத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் கேரள அரசு, தமிழக வளங்களை பயன்படுத்த அனுமதி கோருவது நியாயமற்றது என்றும் அவர் விமர்சித்தார்.
விழிஞ்சம் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் நாட்டின் பல விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பெருநிறுவனங்களின் ஒப்பந்த நிர்வாகத்தில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரைவுச் சாலைகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் வேகமாக சுரண்டப்படும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கற்கள், எம்–சாண்ட், மணல் ஆகியவை வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல; அவை தமிழரின் மலைகள், நீராதாரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வுரிமையையே எடுத்துச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வரும் சூழலில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சியை நோக்காமல், அவற்றை பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றம் என குறிப்பிட்ட அவர், தமிழக அரசு தற்போது அமல்படுத்தியுள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாடுகளில் எந்தவித தளர்வும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “தமிழகத்தின் கனிம வளங்கள் தமிழக மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும். அண்டை மாநிலங்களின் கட்டுமானங்களுக்கோ, பெருநிறுவனங்களின் லாபத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தமிழகத்தின் இயற்கை வளங்கள் வழங்கப்படமாட்டாது” என்ற தெளிவான கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



