அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னர் பாடப்பட்டதை வரலாற்றில் முதல்முறையாக நடந்தது என்று கூறுவது தவறானது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். தவெக அன்றும், இன்றும், என்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தனது நிகழ்ச்சிகளை தொடங்கும் என்றார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல்வேறு துறைகள் தொடர்புடைய விஷயம் என்பதால், அதனை முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.
திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள் இருந்தால், அரசியல் காரணங்களுக்காக அவை நிறுத்தப்பட மாட்டாது என்றும், அம்மா உணவகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில்தான் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கொளத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சரிபார்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆராய்ச்சி செய்வது அவர்களது உரிமை என்றாலும், தேர்தல் தோல்விக்கான காரணத்தை வெளியில் தேடாமல், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால், தற்போதுள்ள கட்டண நிர்ணயக் குழு மறுகட்டமைப்பு செய்யப்படும் என்றும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



