டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்றும், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 2,500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கவும், அதற்கான சட்டத் திருத்தத்தை வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்தல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைப்பது முறைகேடுகளையும் சட்டவிரோத மதுவிற்பனையையும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வந்த பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 710 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூட வேண்டிய அரசு, அவற்றை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிப்பது நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட்டால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதுடன், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.



