அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பான விவகாரத்தைக் கண்டித்தும், மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்று, அவை கூடுவதற்கு முன்பு மகர் த்வார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது, பப்பு யாதவ் காவி உடை அணிந்து போலி சாமியார் வேடத்தில் தோன்றி, உண்டியலில் காணிக்கை வசூலித்து அதை திருடுவது போன்ற நாடகத்தை அரங்கேற்றினார். மேலும், ராகுல் காந்தி உண்டியலில் காணிக்கை செலுத்துவது போன்ற காட்சியும் இடம்பெற்றது.
தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய நடவடிக்கைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயற்சி மேற்கொண்டாலும் அது பலனளிக்காததால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அமளி தொடர்ந்ததால், அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
பாஜக விமர்சனம்
இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, “அடிப்படையற்ற கருத்துகளை தெரிவிப்பது ராகுல் காந்தியின் வழக்கமாகிவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாததால், அக்கட்சியினர் நிதானத்தை இழந்தது போல் தெரிகிறது” என்று விமர்சித்தார்.



