தமிழக விவசாயிகளின் ஜீவநதியான காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை தற்போதைய அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்பட்டு, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்துவிடவில்லை என்றும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளையும் கர்நாடக அரசு செயல்படுத்த மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேகேதாட்டில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை உருவாகும் என்றும், இதனால் குடிநீர் மற்றும் பாசன வசதிகளை நம்பியுள்ள சுமார் 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரங்களில் தமிழக அரசு மவுனம் காக்காமல், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



