மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் (Reading) பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட கருத்தைப் பகிர்ந்து, தனது சமூக வலைதளப் பதிவில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்திருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது என்றும், சமூக வலைதளங்களில் வெளியாகும் பொதுமக்களின் கருத்துகளைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் குளறுபடிகள் குறித்து முழுமையான ஆய்வு செய்து தீர்வு காணப்படும் வரை, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனிவரும் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் (Reading) பணி துல்லியமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட கருத்தில், 3.70 லட்சம் குடும்பங்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை அரசே ஒப்புக்கொண்டு, தனது நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்திய அரசு, இனியாவது இந்த நடைமுறையைச் சீரமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.



