தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன், புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ.3,50,027 கோடி மதிப்பிலான 2026-27-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், சமூகநீதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1,73,445 கோடி புதிய கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் “வெற்றி” என்ற பெயரில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
கிராம வேலை உறுதித் திட்டத்தின் கீழ் “வெற்றி 150″ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது வழங்கப்படும் 125 நாட்கள் வேலைக்கு கூடுதலாக 25 நாட்கள் சேர்த்து, ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை உறுதி செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வீடற்ற ஏழை மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில் “வெற்றி வீடு“ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். முதல் ஆண்டிலேயே 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த “வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு“ திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காக “வெற்றி தொழில் முனைவோர் திட்டம்“ ரூ.75 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு “வெற்றி மடிக்கணினி திட்டம்“ ரூ.2,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெண்கள் நலனை முன்னிறுத்தி “அண்ணன் சீர்வரிசை திட்டம்“ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருமண நாளில் தகுதியான பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம்“ திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்காக மாநிலம் முழுவதும் “தாய் கேர்“ சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் இலவச தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.139 கோடி மதிப்பில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் “சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ்“ திட்டம் செயல்படுத்தப்படும்.
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம்–கிளாம்பாக்கம், கோயம்பேடு–பட்டாபிராம், பூந்தமல்லி–சுங்குவார்சத்திரம் ஆகிய மூன்று புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான MY-HOME வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருநர்களின் நலனை கருத்தில் கொண்டு ஐந்து மாவட்டங்களில் “அரண்“ தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கில் “மண்ணின் மகள்“ திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் மேம்பாட்டிற்காக அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடியும், பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த “ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு“ ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக “அறிவகம்“ உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை தொழில்முனைவோராக உருவாக்க “சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்“ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், இந்த ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான “நம்பிக்கை இல்லம்“ அரசு மையங்கள் அமைக்கப்படும். இதில் சிறப்புக் கல்வி, மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இருப்பினும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.9,818 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “இது திராவிட மாடல் அரசின் ரீமேக் வெர்ஷன். சொன்னதைச் செய்யாத புஸ்வாண பட்ஜெட்; ப்ளாஸ்ட் அல்ல, வேஸ்ட்“ என்று விமர்சித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் வழங்க முடியும்“ என்று கடுமையாக விமர்சித்தார்.



