தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான நடவடிக்கைகளோ இல்லாத வெற்று அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாநிலத்தின் வருவாயைப் பெருக்கவோ, புதிய திட்டங்களை செயல்படுத்தவோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்த ஆக்கப்பூர்வமான நோக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. இது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளம் மற்றும் மின்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான நிதி முந்தைய ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டை நிர்வாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும்.
தொழிலாளர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் சமூகநீதித் துறைகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான நிதி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.20,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியிலிருந்து தற்போது ரூ.7,000 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதி குறித்து பேசும் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.
பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் குறுவை சாகுபடி பாதிப்புக்கான இழப்பீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். பதிவுத்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசு கூறினால், முக்கிய துறைகளுக்கான நிதி ஏன் குறைக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதன் மூலம் பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு பதிலாக அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத ஆட்சியில் சுமார் ரூ.25,000 கோடி கடன் வாங்கியிருப்பது நிதி நிர்வாகத்தின் பலவீனத்தை காட்டுகிறது. 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று கூறியிருந்தாலும், அதை எவ்வாறு அடைவது என்பது குறித்து எந்த தெளிவான செயல்திட்டமும் இல்லை.
மொத்தத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவோ, அரசின் வருவாயை அதிகரிக்கவோ, நிதிப்பற்றாக்குறை மற்றும் கடன் சுமையை குறைக்கவோ தேவையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இல்லாத, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கையாகவே தவெக அரசின் முதல் பட்ஜெட் அமைந்துள்ளது,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.



