காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அப்போது முதல்வர் விஜய் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது முழுமையாக முதல்வரை புகழும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை பெயர் மாற்றம் செய்து புதிய திட்டங்கள் போல அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், வேளாண் பட்ஜெட்டில் அவர்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், இதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மேகேதாட்டு மற்றும் காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை முதல்வர் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேகேதாட்டு அணை விவகாரம், பயிர்க் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “காவிரி விவகாரம் குறித்து பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்” என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார்.



