காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர். சரத்குமார், செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரப்படி, நடிகர் சரத்குமார் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கடன்களை அடைப்பதற்காக சென்னை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் ரூ.2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் அவர் வழங்கிய காசோலை, வங்கியில் போதுமான இருப்பு இல்லாததால் திரும்பி வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்ரீகிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, அதற்கான சம்மனை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



