“போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நட்பையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, அது ஒரு உயிரைப் பறிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அமுதனை இழந்து பெருந்துயரத்தில் வாடும் அவரது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அமுதன் செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்கள் பெறப்பட்டதாகவும், அதன்பிறகு ஏறக்குறைய 20 மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் பெற்றோரின் குற்றச்சாட்டை வலுப்படுத்துகின்றன.
அப்படியிருக்கையில், போதைப்பொருள் புழக்கம் என்ற முக்கிய காரணத்தை மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என்ற கோணத்தில் வழக்கை மாற்ற முயல்வது அநீதிக்குத் துணைபோகும் செயலாகும். மேலும், இதை ‘குழு மோதல்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 20 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கிக் கொல்வதை ‘குழு மோதல்’ என்று கூறுவது எப்படி நியாயமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பரப்புரைக் கூட்டங்களில் தன்னை ‘தாய் மாமன்’ என்று கூறிக்கொள்ளும் முதல்வர் விஜய், 19 வயது மாணவர் அமுதனின் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன நீதியை வழங்கப் போகிறார்? நடந்த சம்பவங்களை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகமும், போதைப்பொருள் தொடர்பில்லை என கூறும் ஆளும் அரசின் போக்கும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே, மாணவர் அமுதன் கொலை வழக்கில் நீதிவிசாரணை நடத்தி, தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.



