தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.4,476 கோடி முதலீட்டில் 5,074 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 8 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.2,676 கோடி முதலீட்டில் 1,550 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 5 புதிய தொழில் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
செல்பயோஸ், பேட்டர், ZF, HD சப்ளை, க்ரீன் சிக்னல், HL மேண்டோ, டைம்லர், வேல்முருகன் ஹெவி இன்ஜினீயரிங் மற்றும் ஜீப்ரானிக்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட 20 பேருக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டிஷ்யூ காகித உற்பத்தித் திட்டத்தை முதல்வர் திறந்து வைத்தார். தென்னிந்தியாவில் முதன்முறையாக ‘லூமியா’ (Loomia) என்ற பிராண்டின் கீழ் ஃபேஷியல், நாப்கின், டவல் மற்றும் கழிவறைப் பயன்பாட்டிற்கான உயர்தர டிஷ்யூ காகிதங்கள் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகலில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏரோஹப் வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.122.08 கோடி மதிப்பிலான 11 புதிய கட்டிடங்களும், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.55.66 கோடி செலவில் கட்டப்பட்ட 2 புதிய கட்டிடங்களும் உள்ளிட்ட மொத்தம் ரூ.777.74 கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற திட்டப் பணிகளும் திறந்து வைக்கப்பட்டன.
7 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள், சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 55 திட்டங்கள் புதிய (Greenfield) திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க (Brownfield) திட்டங்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு
மாநாட்டுக்கு முன்பாகவும், இம்மாநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், பல்வேறு துறைச் செயலர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



