மதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பரமசிவம் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், சிந்தாமணி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.
வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறிய பிரச்சினையில், தனது மனைவி அய்யம்மாளுடன் நியாயம் கேட்டு காவல் நிலையத்துக்கு சென்ற பரமசிவத்தை பாதுகாப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்குள்ளேயே கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், அங்கு சென்ற காவலர்கள் அவரை மிரட்டி கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாகவும், இந்த விவகாரம் குறித்து வெளியில் தெரிவித்தால் கஞ்சா வழக்குப் பதிவு செய்து குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிந்தாமணி காவல்துறையினரே காரணம் என உயிருக்கு போராடிய நிலையிலும் பரமசிவம் பதிவு செய்ததாக கூறப்படும் மரண வாக்குமூலம் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும், சிந்தாமணி காவல் நிலையத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காக காவல்துறை தரப்பில் ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்ற அச்சமும் எழுகிறது. காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாக மாறுவது ஜனநாயகத்துக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
எளிய உழைக்கும் மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது அதிகாரத் திமிருடன் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
பரமசிவத்தை தாக்கி சித்திரவதை செய்து உயிரிழப்புக்குக் காரணமான சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரமசிவத்தின் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.



