கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொன்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னான் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று. அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனை யிவ் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசுமேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என்று தெரிவித்துள்ளார்.



