செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்திக்கு ஊரார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது தாய் பெரியதாய் பெயரில் கூட்டுறவு வங்கியில் 1,24,000 மாட்டு லோன் வாங்கியுள்ளார். இந்த லோனில் தனது அண்ணன் செந்தில்குமார் பெயரையும் இணைத்ததற்கு அறிவழகன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை சேகர் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேடியப்பன், ஆலடியான், பலராமன், ராஜேஷ், ரஞ்சித்குமார் உட்பட 16 பேர் கொண்ட பஞ்சாயத்தார், அறிவழகனைக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனைப் பஞ்சாயத்தில் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதற்கு மறுத்த அறிவழகன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், அறிவழகன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் இவரை அழைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். இதுகுறித்து அறிவழகன் 2024-ல் மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை, அறிவழகனின் மனைவி சசிகலாவின் பாட்டி பெரியதாய் உயிரிழந்துள்ளார். பாட்டியின் சாவுக்குச் சென்ற சசிகலாவை, “ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதால், அவரை சடங்கில் சேர்க்கக் கூடாது” எனக் கூறி, கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் விரட்டி அடித்துள்ளது.
இதையடுத்து, சசிகலா போலீசாரிடம் புகார் அளித்ததையடுதது சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், செங்கம் வட்டாட்சியர் ராம் பிரபு, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் முனுசாமி, கிராம உதவியாளர் ஆகியோர் ஊராரிடம் சமரசம் பேசியுள்ளனர்.
எனினும், சமரசத்தை ஏற்க மறுத்த பஞ்சாயத்துக்காரர்கள், “பெரியதாயின் சடங்கில் சசிகலா மட்டும் இருக்கட்டும்; நாங்கள் எல்லாம் வெளியேறுகிறோம்” என்று கூறி, மேளக்காரர்கள் உட்பட ஊர்க்காரர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இதனால் அதிகாரிகள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன. சமரம் தோல்வியுற்றதால், சசிகலா தன் குழந்தையுடன் செங்கம் துணை கண்காணிப்பாளர் ராஜன் அலுவலகம் முன்பு தர்னாவில் ஈடுபட்டார்.
இதன் பிறகு வெளியே வந்த செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், சசிகலாவை “ஒருமையில்” பேசி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். சசிகலாவை கடைசி வரையிலும் தன் பாட்டியின் ஈமச்சடங்கில் கலந்துகொள்ள விடாமல், அதிகாரிகளை மிரட்டியும் கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் செய்த இந்தச் சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



