மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சிக்குட்பட்ட வண்டிமேட்டில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் செங்குன்றம் பஜார் வண்டிமேட்டுக்கு விரைந்து சென்ற செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார். மற்றும் காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகப்படும்படியாக திரிந்த மணிவண்ணன் (வயது27), மதிவாணன் (28) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் 10 கிராம் மெத்த பெட்டமைன் போதைப்பொருளை கண்டெடுத்து பறி முதல் செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் நாரவாரிகுப்பம் பகுதியில் வசித்து வந்த சர்மா பாத்திமா (வயது 30) என்பவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கெளசியா (வயது 35) கொடுத்துச் சென்றதாக கூறினர். பின்னர் அவரது வீட்டையும் சோதனை செய்த காவல்துறையினர் அங்கு 65 கிராம் போதைப் பொருளை கைப்பற்றினர்.
காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், அந்த நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் எனத் தெரிய வருகிறது.



