திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்க கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான வ.உ.சி நகர் 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது, இந்த மண்சரிவின் போது அண்ணாமலையார் மலையின் மீது இருந்து 40 டன் எடையுள்ள மிகப்பெரிய பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்தது.
இந்த மண் சரிவில் கணவன், மனைவி அவர்களுடைய இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண் சரிவில் புதைந்து பலியானார்கள்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தை, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் குழுவினர் உள்ளிட்ட குழுவினருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது பெய்த கனமழையால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும், அந்த இடம் தற்போது பாதுகாப்பாக உள்ளதா என்றும், மலையில் மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது எனவும் நேரில் கேட்டறிந்தார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கனமழை ஏற்பட்டால் பொது மக்களை எவ்வாறு அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவது என்றும், எங்கு தங்க வைப்பது என்றும், அதிகாரிகள் குழுவினருடன் நேரில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் இராம் பிரதீபன், மாவட்ட வன அலுவலர், சுதாகர், திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.



